தமிழ்நாட்டின் சாபக்கேடோ
என்னவோ...எந்த திட்டம் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்படுமேயானாலும் உடனடியாக சில
மக்கள் விரோத தேச விரோத சக்திகள் அதை எதிர்க்க முற்படுவதும், சிறிது கூட நன்மை
தீமைகளை ஆராய்ந்தறியாமல் பாமர மக்களும் விஷய ஞானம் இல்லாதவர்களும்
பொய்ப்பிரச்சாரங்களை நம்பி அந்த எதிர்ப்புக் கூட்டத்தோடு கைகோர்த்துக் கொள்வதும்
நடைமுறை வழக்கமாகிவிட்டிருக்கிறது.
ஒரு நாடு சுயச்சார்புத்
தன்மையுடன் பல முனைகளிலும் பல துறைகளிலும் வளர்ச்சி காணும்போதுதான் முன்னேறும்;
நாடு முன்னேறும்போது மக்களின் வாழ்க்கையும் வளம்பெறும்.
இப்போது விஷயத்திற்கு
வருவோம்.
எரிவாயு, கச்சா எண்ணெய்
போன்ற இயற்கை வளங்கள் ஒரு நாட்டில் எந்த அளவிற்கு உற்பத்தி செய்ய முடிகிறதோ அந்த
அளவிற்கு அந்நாடு செல்வச்செழிப்புள்ளதாகவும் வலிமை மிக்கதாகவும் மாறும்.
பூமிக்கடியில் எல்லா இடங்களிலும் இவை கிடைப்பதில்லை. குறிப்பிட்ட சில
இடங்களில்தான் கிடைக்கின்றன. இவ்விடத்தில் இவ்வளங்கள் கிடைக்கக்கூடும் என்று
ஆரம்பகட்ட ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்படும்போது, அரசு, தனக்குச் சொந்தமான
ONGC போன்ற நிறுவனங்களின் மூலமோ தனியார் நிறுவனங்களின் மூலமோ அவ்விடத்தில் மேலும்
ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பாதுகாப்பான தொழில்நுட்பங்களின் உதவியுடன் உற்பத்தியை ஆரம்பிக்கிறது.
இப்படித்தான் தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் எண்ணெய் வளங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன; உற்பத்தியும் நடைபெற்றுவருகிறது. இத்தகைய இடங்களில் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை.
விவசாய நிலங்களிளின் பூமிக்கு அடியே இத்தகைய வளங்கள் கிடைக்கும் என்று கண்டறியப்படுமேயானால், நிலத்தின் உரிமையாளருக்கு தகுந்த நஷ்ட ஈட்டை வருட குத்தகையாகவோ மொத்தமாகவோ அளித்து அரசு நிலத்தை எடுத்துக் கொள்கிறது. விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அவர்களுக்கு கூடுதலான வருமானமே இதன் மூலம் கிடைக்கும். இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். அப்பகுதியில் பெரும் வளர்ச்சியும் உண்டாகும். இவை வெறும் கற்பனையல்ல..பல பகுதிகளிலும் நாம் கண்டிருக்கும் உண்மைகள்தான்.
மற்றபடி நிலத்தடி நீர் பாதிக்கப்படும்.. விவசாயம் அழிந்துவிடும் என்பதெல்லாம் வெற்றுக் கூச்சலே தவிர வேறொன்றுமில்லை. இந்த முறையில்தான் எண்ணற்ற அணைகள், நிலக்கரிச் சுரங்கங்கள், தொழிற்சாலைகள், மின் நிலையங்கள், சாலைகள்,ரயில் பாதைகள் மட்டுமல்ல.. எண்ணெய் எரிவாயு உற்பத்தி செய்யும் மையங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தக்க பாதுகாப்புடனேயே இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. எனவே மக்கள் அஞ்சத் தேவையில்லை. இந்தியாவில் மட்டுமல்ல.. உலகம் முழுவதிலுமேயே மக்களுக்கு பயன்படும் வளர்ச்சித் திட்டங்கள் இப்படித்தான் நிறைவேற்றப்படுகின்றன.
ஆனால், இத்தகைய திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது, மக்களின் பாதுகாப்பு, முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, மாற்று இடம், வேலைவாய்ப்பு, ஊழல், முறைகேடின்மை போன்றவற்றை அரசுகள் உத்தரவாதப்படுத்த வேண்டும்; மக்களும் அதற்காகப் போராடலாம்.
அதை விடுத்து, எந்த திட்டமானாலும், சுயநலப்போக்குடைய வளர்ச்சியை விரும்பாத சிலரது வழிகாட்டுதலை ஏற்று, கண்மூடித்தனமாக அவற்றை எதிர்க்கத் துவங்கினால், உண்மைகளை அறிந்து கொள்ளாமல் உணர்ச்சிபூர்வமான கோஷங்களுக்கு மயங்கி வளர்ச்சித் திட்டங்களை தடுத்து நிறுத்தினால், தமிழர்களின் முன்னேற்றம் மட்டுமல்ல.. தமிழகமும் பின்தங்கிப் போகும்.
எனவே..இத்தகைய தீய சக்திகளிடம் மக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடனுமிருந்து அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.
No comments:
Post a Comment