தனது மனைவிக்கு சரியான முறையில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படாததனால் அவள் இறந்துவிட்டாள் என்று கோபமுற்ற ஒரு நபர் மற்றும் அவரைச் சார்ந்த சிலரால் தூத்துக்குடியில் ஒரு பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இது சம்பந்தமான் குற்றவாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தப் படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்திருக்கின்றனர்.
மருத்துவர்கள் மக்களின் உயிரையும் உடல் நலத்தையும் காக்கும் உயரிய தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்; அப்படிப்பட்டவர்கள் வேலை நிறுத்தம் செய்து மக்களின் உயிரோடு விளையாடும் கொடூர செயலில் இறங்கலாமா .. ?
மருத்துவர் படுகொலை என்பது அதிர்ச்சி அடைய வைப்பது; வன்மையான கண்டனத்திற்குரியது. அதற்காக மருத்துவ சமுதாயம் கோபத்தோடு பொங்கி எழுவது இயற்கையானதுதான். ஆனால், அந்தக் கோபம் அந்தக் கொலையோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரோடும் வாழ்க்கையோடும் விளையாடும் வகையில் பிரயோகிக்கப்படுவது எப்படி நியாயமாகும் .. ? சில தனி நபர்களின் தவறான செயலுக்காக அதற்காக அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்ட பின்னரும் கூட ஒட்டுமொத்த மக்கள் சமுதாயத்தையே பழிவாங்க நினைப்பது கொடூரமான செயல் இல்லையா .. ?
வேலை நிறுத்தம் செய்யாமல் வேறு வகைகளில் மருத்துவர்கள் தங்கள் போராட்டங்களை மேற்கொண்டிருக்கலாம். கருப்பு பேட்ஜ் அணியலாம்; கன்டனப் போஸ்டர்கள் ஒட்டலாம்; படுகொலையைக் கண்டிக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கலாம்; தங்கள் பணி முடிந்த பிறகு தர்ணா, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் கூட ஈடுபட்டிருக்கலாம். வேலை நிறுத்தம் என்பது மக்களின் உயிர்களைப் பறிப்பதற்கு சமமானது. அப்படிப்பட்ட கொடூரமான காரியத்தில் மருத்துவர்கள் ஈடுபடலாமா .. ?அவர்களது வேலை நிறுத்தத்தினால் எங்காவது யாராவது ஒருவர் சிகிச்சையின்றி மரணமடைந்திருந்தால் அவரது உயிரை அவர்களால் மீட்டுத்தர முடியுமா .. ? அவரது குடும்பத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட முடியுமா .. ? நிச்சயம் முடியாது.
எனவே, இனியாவது மருத்துவர்கள் எதற்காகவும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்தபடி. அந்தப் புனிதத் தன்மையிலிருந்து அவர்கள் விலகிச் செல்லாமலிருக்க வேண்டும்.