மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் நில ஆர்ஜித சட்டம் விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரித்துக்
கொள்கிறதா..? அல்லது
மக்களுக்கு நன்மை செய்யவும் கிராமங்களை முன்னேற்றவும் இச்சட்டம் பயன்படுமா..?
பிரதமர் நரேந்திர
மோடி அவர்கள்
மாதம்தோறும் பல்வேறு
பிரச்னைகளைப் பற்றி 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் உரையாற்றுகிறார்.கடந்த 22/3/2015 அன்று விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி வானொலியில்
உரையாற்றினார். அதில் இந்த நில ஆர்ஜித
சட்டம் பற்றி மறைக்கப்படுகிற பல்வேறு
உண்மைகளைப் பற்றி மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
அவருடைய அந்த உரையின் தமிழாக்கச் சுருக்கம்
இங்கே தரப்பட்டிருக்கிறது
எனது அருமை விவசாய சகோதர சகோதரிகளே!!
உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்! நாட்டின் நெடுந் தொலைவுகளில் இருக்கும் என் விவசாய சகோதர சகோதரிகளுடன் பேசக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது என் பேறாகவே நான் கருதுகிறேன். விவசாயிகளோடு நான் பேசும் போது, ஒரு வகையில் நான் கிராமத்துடனேயே பேசும் உணர்வு ஏற்படுகிறது, விவசாயப் பணியாளர்களோடு பேசுவதாக உணர்கிறேன், இந்த விளை நிலங்களில் பணி புரியும் தாய்மார்கள், சகோதரிகளோடு பேசுவதாக நினைக்கிறேன். அந்த வகையில் பார்க்கும் போது, நான் இது வரை வெளிப்படுத்திய என் மனதின் குரல்-உணர்வுகளைக் காட்டிலும் இது மிகவும் வித்தியாசமான ஒன்றாக எனக்குப் படுகிறது. விவசாயிகளோடு என் மனதின் குரலை நான் பரிமாறிக் கொள்ள நினைத்த போது, மிகத் தொலை தூரங்களில் இருக்கும் கிராமங்களில் வசிப்பவர்கள், என்னிடத்தில் இத்தனை கேள்விகள் கேட்பார்கள், இத்தனை அதிக தகவல்களை அளிப்பார்கள், என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை; இது எனக்கு அதிக ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. நீங்கள் எத்தனை விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள்! நீங்கள் எத்தனை ஆக்கபூர்வமாக சிந்திக்கிறீர்கள்! யாராவது உங்கள் குரல்களுக்கு காது கொடுக்க மாட்டார்களா என்று நீங்கள் ஆவலோடு காத்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது!! முதலில் நான் உங்களுக்கு என் வணக்கத்தை தெரித்துக் கொள்கிறேன். உங்கள் கடிதங்களைப் படித்த பின்னர் அதில் நான் உங்கள் வலிகளை, துயரங்களைப் பார்த்தேன், இந்த அளவுக்கு சகித்துக் கொண்ட நீங்கள், எந்த விதமான கஷ்டங்களை அனுபவித்திருப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. உங்கள் கருத்துக்கள் எனக்கு அதிர்ச்சியை அளித்திருக்கின்றன. ஆகையால் நான் இந்த மனதின் குரலை கல்விப் பயிற்சிக்கு அளிக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகவே எடுத்துக் கொள்கிறேன். எனதருமை விவசாய சகோதர சகோதரிகளே, நீங்கள் எழுப்பியுள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும், அனைத்துக் வினாக்களைப் பற்றியும், நீங்கள் முன் வைத்திருக்கும் அனைத்து பரிமாணங்களைப் பற்றியும், முழுமையான வகையில் நான் அரசில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவேன், இதயபூர்வமான அணுகுமுறையைக் கொண்டு வருவேன், எனது கிராமங்கள், எனது ஏழை மக்கள், என் விவசாய சகோதரர்கள் ஆகியோரை இந்த நலிந்த நிலையில் வைத்திருக்க மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன் சகோதரர்களே!
விவசாயிகள் விவசாயம் தொடர்பான பிரச்சனைகளை முன் வைத்திருக்கிறார்கள்; ஆனால் இவை தவிர, அவர்கள் வேறு பல விஷயங்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார்கள். கிராமங்களில் நிலவும் அராஜக நிலை, வன்முறையாளர்களால் அவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள் ஆகியவை பற்றியும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இயற்கை சீற்றங்கள் ஏற்படுத்தும் நாசம் ஒரு புறம் இருந்தாலும், அக்கம் பக்கத்தில் இருக்கும் சின்னச் சின்ன வியாபாரிகளால் ஏற்படும் தொல்லைகளைக் கூட அவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. கிராமத்தில் மாசடைந்த நீரைப் பருக வேண்டி இருப்பது குறித்து சிலர் தகவல் அளித்திருக்கிறார்கள்; கிராமங்களில் தங்கள் கால்நடைகளைப் பராமரிக்க வாய்ப்பு இல்லாமல் இருப்பதைப் பற்றி சிலர் தெரிவித்திருக்கிறார்கள்; வேறு சிலரோ, கால்நடைகள் இறந்து விட்டால், அவற்றை முறையாக அகற்றக் கூட வழியில்லாமல் இருப்பதால், நோய்கள் பரவக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக கவலைப்பட்டார்கள். அதாவது எந்த அளவுக்கு புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக ஆட்சியாளர்களுக்கு ஒரு கடுமையான செய்தி அளிக்கப்படுகிறது. இந்த சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் போது தான் நமக்கு ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறது. இதையெல்லாம் படிக்கும் போது, சில வேளைகளில் எனக்கு அவமானமாக கூட இருந்தது. நாம் என்ன செய்திருக்கிறோம்? ஏன் இப்படி செய்திருக்கிறோம் என்பதற்கான விடை என்னிடத்தில் இல்லை. ஆனால் ஒன்று, நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் என் மனதைத் தொட்டு விட்டன என்பது என்னவோ உண்மை. கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்த, உண்மையான முயற்சிகளை மேற்கொள்வேன். அனைத்துக் கோணங்களிலிருந்தும் நான் அரசில் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன், புரிதலை உருவாக்குவேன், துரிதமாக செயல்பட வைப்பேன், இதுவே எனது முயற்சியாக இருக்கும் என்பதை நான் உறுதி அளிக்கிறேன்
உங்களின் இந்த சங்கடம் நிறைந்த வேளையில், அரசு புரிதலோடு, உங்கள் தோளோடு தோள் நின்று துணை வரும்; முடிந்த மட்டில் உங்கள் எதிர்பார்ப்புக்கள் நிறைவு செய்யப்படும் என்று நான் நம்பிக்கை அளிக்கிறேன். கிராமங்களில் வாழ்பவர்களும், விவசாயிகளும் பல பிரச்சனைகளை எழுப்பி இருக்கிறார்கள். நீர் பாசனம் தொடர்பான கவலை கணிசமாக இருக்கிறது, கிராமங்களில் சாலை வசதி இல்லை என்பது குறித்து கோபம் இருக்கிறது, உரங்களின் விலையேற்றம் குறித்தும் விவசாயிகளின் கோபம் வெளிப்படுகிறது, மின்சாரப் பற்றாக்குறை தவிர, பிள்ளைகளின் கல்வி, எதிர்காலத்தில் அவர்களுக்கான வேலை வாய்ப்பு ஆகியவை பற்றியும் அவர்கள் கவலை வெளிப்படுகிறது. கிராமங்களில் போதைப் பழக்கம் நிலவி வருவதைக் குறித்து தாய்மார்களும், சகோதரிகளும் தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சிலரின் கணவன்மார்களிடம் புகையிலை போடும் பழக்கம் இருப்பதைக் குறித்தும் தங்கள் வருத்தத்தை எனக்குத் தெரிவித்து இருக்கிறார்கள். உங்கள் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது
அரசின் திட்டங்கள் பற்றி நாங்கள் அதிகம் கேள்விப் படுகிறோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை எங்களை வந்து சென்றடைவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள். நாங்கள் இத்தனை உழைக்கிறோம், மக்களின் வயிறுகள் நிரம்புகின்றன, ஆனால் எங்கள் பைகள் என்னவோ நிரம்புவதில்லையே என்று விவசாயிகள் வருத்தப்படுகிறார்கள். எங்களுக்கு முழுப்பணமும் கிடைப்பதில்லை. பொருட்களை நாங்கள் விற்க எடுத்துக் கொண்டு செல்லும் போது, வாங்குபவர்கள் யாரும் இருப்பதில்லை; குறைந்த விலையில் விற்க வேண்டி இருக்கிறது. விளைச்சல் அதிகம் இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, நாங்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இப்படி விவசாயிகள் தங்கள் மனதின் குரல்களை என்னிடத்தில் ஒலித்திருக்கிறார்கள். மத்திய அரசின் அனைத்துத் துறைகள், மாநில அரசுகள் ஆகியவற்றையும் நான் அதிக ஆக்கபூர்வமான வழியில் செயல்பட வைப்பேன், துரிதமாக இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்பட ஊக்குவிப்பேன் என்று என் எனது விவசாய நண்பர்களுக்கு உறுதி அளிக்கிறேன். உங்கள் மனோதைரியம் குறைவதாக எனக்குப் படுகிறது. 60 ஆண்டுகள் நீங்கள் காத்திருந்திருக்கிறீர்கள் எனும் போது, இது இயல்பான ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது.
உங்களின் ஏராளமான கடிதங்களில், அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும், நடப்பு நிலம் கையகப்படுத்தும் மசோதா பற்றி தங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். அதன் தாக்கம் அதிகம் காணப் படுகிறது. என்ன மாதிரியான தவறான கருத்துக்கள் பரப்பப் பட்டிருக்கின்றன என்பது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. நீங்கள் கேட்டிருக்கும் சின்னச் சின்ன கேள்விகளுக்குக் கூட விடை அளிப்பதன் மூலம் உண்மை என்ன என்பதை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
நிலத்தைக் கையகப்படுத்தும் மசோதா சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பாக சட்டமாக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? நாடு சுதந்திரமடைந்து 60,
65 ஆண்டுகள் கழித்தும் கூட, இந்தச் சட்டம் தான் நிலுவையில் இருந்து வந்திருக்கிறது. இன்று யாரெல்லாம் விவசாயிகளின் நம்பிக்கையாக தங்களை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார்களோ, அவர்களும் கூட இதே சட்டத்தின் மூலமாகவே நாட்டை நிர்வாகம் செய்தார்கள், ஆட்சி புரிந்தார்கள், விவசாயிகளின் இன்றைய நிலைமைக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லை. எங்களுக்கும் இந்தக் கருத்து இருந்தது. நாங்கள் எதிரணியில் இருந்த போதும் இதை ஏற்றோம். 2013இல் அவசரக் கோலம், அள்ளித்தெளித்த கோலமாக இந்த மசோதா அறிமுகப் படுத்தப்பட்டது. நாங்களும் அந்த காலகட்டத்தில், ஒத்துழைப்பு அளித்தோம். விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் என்னும் போது, யார் தான் ஒத்துழைப்பு அளிக்க மாட்டார்கள்? ஆனால் அது சட்டமாக்கப்பட்ட பிறகு, சில விஷயங்கள் எங்கள் கவனத்துக்கு வந்தது. இதன் மூலமாக விவசாயிகள் ஏமாற்றப்படுவார்கள் என்று எங்களுக்குத் தோன்றியது, விவசாயிகளை ஏமாற விடக் கூடாது என்று நாங்கள் தீர்மானித்தோம். எங்கள் அரசு அமைந்த போது, இந்த சட்டத்தை மாற்ற வேண்டும், சட்டத்தில் மேம்பாடுகளை ஏற்படுத்த வேண்டும், சட்டத்தில் இருக்கும் குறைபாடுகளைக் களைய வேண்டும் என்றெல்லாம் மாநில அரசுகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மற்றொரு புறத்திலோ, சட்டமாக்கப்பட்ட ஓராண்டுக்குப் பிறகும் கூட, எந்த மாநில அரசும் இதை அமல்படுத்த தயாராக இல்லை என்ற நிலை. அமல் படுத்தியவர்களும் என்ன செய்தார்கள், எடுத்துக்காட்டாக மஹாராஷ்ட்ர, ஹரியாணா மாநிலங்களில் காங்கிரஸ் அரசு இருந்தது, இன்று விவசாயிகளின் தோழன் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் இந்தச் சட்டத்தை அமல் செய்த போது, விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய ஈவுத் தொகையை பாதியாகக் குறைத்து விட்டார்கள். இதுவா விவசாயிகளுக்கு செய்யப்படும் நியாயம்? இவை அனைத்தையும் கவனித்த பின்னர், இந்தச் சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் என்று எங்களுக்குப் பட்டது. அவசர கோலத்தில் செய்யப்பட்டவைகளில் குறைபாடுகள் இருக்கலாம், நோக்கத்தில் குற்றம் வேண்டுமானால் இல்லாமல் போகலாம், ஆனாலும் கூட குறைபாடுகளைக் களையத் தானே வேண்டும்? கடந்த ஆட்சியினரின் நோக்கம் சரியா, சரி இல்லையா என்பது பற்றி நாங்கள் அவர்கள் மீது எந்த விதமான குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை, எங்களது ஒரே நோக்கம், விவசாயிகளுக்கும் சரி, விவசாயிகளின் பிள்ளைகளுக்கும் சரி நல்லது நடக்க வேண்டும் என்பது தான், கிராமங்களுக்கும் நல்லது நடக்க வேண்டும்; ஆகையால் சட்டத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவை சரி செய்யப்பட வேண்டும். எங்களின் நேர்மையான முயற்சி, இந்தக் குற்றங்களைக் களைய வேண்டும் என்பது தான்.
இப்போது நான் மிகப் பெரிய குறையைச் சொல்லவா? விவசாயிகளின் தோழனாக வலம் வந்து வாய் கிழியப் பேசுபவர்கள் இந்தக் கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கத் தயாராக இல்லை, இது உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கலாம். இரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை, சுரங்கத் தொழில் துறை போன்றவற்றுக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்த இந்தியாவில் மட்டுமே 13 வகையான சட்டங்கள் நிலுவையில் இருக்கின்றன என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கடந்த ஆட்சி ஏற்படுத்திய சட்டத்தில் இந்த 13 துறைகளுக்கும் இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதாவது, அதிக அளவு நிலம் தேவைப்படும் இந்த 13 துறைகளை இந்த சட்டத்துக்கு வெளியே வைத்ததன் நோக்கம் இது தான் - நிலம் கையகப்படுத்தும் போது, விவசாயிகளுக்கு கிடைக்கும் ஈவுத் தொகை, முந்தைய சட்டத்தில் கொடுக்கப்பட்ட அளவுக்கே கொடுக்கப்படும். எங்கே சொல்லுங்கள்! இது குறைபாடா இல்லையா? தவறா இல்லையா? நாங்கள் இதை சரி செய்தோம். இரயில்வே துறைக்காகட்டும், நெடுஞ்சாலைத் துறைக்காகட்டும், நிலம் கையகப்படுத்தப்படும் போது, விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ஈவுத் தொகை 4 பங்கு வரை இருக்க வேண்டும் என்ற திருத்தத்தை நாங்கள் கொண்டு வந்தோம். இந்த திருத்தம் விவசாயிகளுக்கு எதிரானது என்று யாராவது கூற முடியுமா? ஆகையால் தான் நாங்கள் அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டி இருந்தது. நாங்கள் அவசரச் சட்டத்தைக் கொண்டு வரவில்லை என்றால், விவசாயிகளின் நிலங்கள் பழைய சட்டத்தின் படியே கையகப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சகாயமான ஈவுத் தொகை ஏதும் கிடைக்காமல் போகும். இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போதும், அரசில் இருந்த பலரே கூட, இதற்கு எதிராக குரல் எழுப்பினார்கள். இந்தச் சட்டத்தை அப்போது இயற்றியவர்கள், இது சட்டமாக்கப்பட்ட பின்னர் இது விவசாயிகளுக்கு எதிரானது, கிராமங்களுக்கு எதிரானது, நாட்டுக்கும் இதனால் நன்மை கிடையாது, இது அதிகாரிகள் சுரண்ட ஏதுவாக, அவர்கள் உல்லாசமாக இருக்க, தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவுமே துணை புரியும் என்று சிலர் கோபமடைந்து கூறினார்கள். இவை அனைத்தும் உண்மையானால், சீர்திருத்தம் செய்யப்பட வேண்டுமா இல்லையா?
ஆகையால் நாங்கள் குறைபாடுகளைக் களைந்து, விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறோம். முதலாவதாக, விவசாயிகளுக்கு அதிகபட்ச நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருந்த 13 வகையான நிலம் கையகப்படுத்தும் சட்டங்களை, இந்தப் புதிய சட்டத்திற்குள் கொண்டு வந்தோம். இதன் மூலம் விவசாயிகளுக்கு முழுமையான ஈவுத் தொகை கிடைக்கும், அவர்களின் அனைத்து உரிமைகளுக்கும் வழி வகை செய்யப்படும் மோதி கொண்டு வரும் இந்தச் சட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு குறைவான ஈவுத் தொகையே கிடைக்கும் என்ற ஒரு புரட்டு பரப்பப்பட்டு வருகிறது.
எனது அருமை விவசாயி சகோதர சகோதரிகளே, அது போன்ற ஒரு பாவச் செயல் பற்றி என்னால் சிந்திக்க கூட பார்க்க முடியாது. 2013இல் கடந்த ஆட்சியாளர்கள் இயற்றிய சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட ஈவுத் தொகையை நாங்கள் குறைக்கவில்லை, மாறாக, அதை 4 பங்கு வரை ஆக்க பரிந்துரைத்திருக்கிறோம். அது மட்டுமல்ல, பழைய சட்டத்தில் இல்லாத இந்த 13 துறைகளையும் கூட இணைத்திருக்கிறோம். மேலும் நகரமயமாக்கத் திட்டத்துக்கு தேவைப்படும் நிலத்தின் 20 சதவீத அளவு, நிலத்தின் சொந்தக்காரருக்கு அளிக்கப்படும். இதன் மூலமாக அவருக்கு பொருளாதார ரீதியாக நிரந்தர இலாபம் கிடைக்கும். இதையும் கூட நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். குடும்பத்தில் ஒரு இளைஞனுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி வகை செய்யப்படும். விவசாயத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் மேலும் இதில் சேர்த்திருக்கும் புதிய விஷயம் என்னவென்றால், மாவட்ட ஆட்சியர், யாருக்கு வேலை கிடைக்கும், எதில் கிடைக்கும், எங்கு வேலை கிடைக்கும் என்றெல்லாம் அரசுக்கு எழுத்து பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்ற புதிய ஷரத்தை இணைப்பதன் வாயிலாக, அரசின் பொறுப்பை நிலைநிறுத்தி இருக்கிறோம்.
எனது விவசாய சகோதர சகோதரிகளே,
அடிப்படையில் அரசு நிலங்களே பயன்படுத்தப்பட வேண்டும். அடுத்த கட்டமாக தரிசு நிலங்கள் பயன் படுத்தப்பட வேண்டும், இறுதியாகவே, மிகவும் தேவைப்பட்டாலே ஒழிய, விளை நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆகையால் தரிசு நிலங்கள் எங்கிருக்கின்றன என்பது தொடர்பான ஆய்வை உடனடியாக மேற்கொள்ளச் சொல்லி இருக்கிறோம். இதனால் அது முதன்மை இடத்தை வகிக்கும்.
நமது விவசாய சகோதரர்கள் வேறு ஒரு குற்றச்சாட்டையும் முன் வைக்கிறார்கள். அவசியத்துக்கு அதிகமான நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்பது தான் அது. இப்போது எந்த அளவுக்கு நிலம் கையகப்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க ஆய்வு செய்யப்படும், அதன் பின்னரே முடிவு செய்யப்பட்டு, தேவைக்கு அதிகமாக நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்பதை இந்த புதிய சட்டத்தின் மூலமாக உங்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன்.
சில வேளைகளில், எப்போது என்ன நடக்குமோ என்ற கவலையே கூட விவசாயிகளை அரித்து, சங்கடத்தை ஏற்படுத்துகிறது. Social Impact Assessment, அதாவது சமுதாயத் தாக்கம் பற்றிய கணிப்பு என்ற பெயரால் நடவடிக்கைகள், விசாரணைகள் ஆகியவை பல ஆண்டுகள் தொடரும் நிலையில், எந்த விவசாயியாவது சுயமாக முடிவு எடுக்க முடியுமா என்று நீங்களே சொல்லுங்கள்? தீர்ப்பு வந்து விட்டால் என்ன செய்ய என்பது பற்றி, நடவு செய்யும் வேளையில் விவசாயிக்கு கவலை ஏற்படும்; இதிலேயே அவருடைய 2, 3 ஆண்டுகள் கழிந்து போகும். அதிகார மட்டத்தில் தேவையற்ற கால தாமதம் காரணமாக விஷயம் சிக்கிக் கொண்டிருக்கும். நடவடிக்கை நீண்டு கொண்டே போகும், மேலும் மேலும் சிக்கல்கள் அதிகரிக்கும், பாவம் நமது விவசாய சகோதரன், அதிகாரிகளின் கால்களைப் பிடித்து, ஐயா, இப்படி எழுதுங்கள், அப்படி எழுத வேண்டாம் என்று மன்றாடக் கூடிய மோசமான நிலை ஏற்படும். இது தான் நடக்கும். நான் என்னுடைய விவசாயிகளை இது போன்று அதிகாரிகள் பிடியில் மீண்டும் சிக்க வைப்பேனா? இது சரியான நிலை அல்ல என்று எனக்குப் படுகிறது. இது வரை செயல்பாடு நீண்டதாகவும், கடினமானதாகவும் இருந்தது, அதை நான் எளிமைப்படுத்த முயற்சி செய்திருக்கிறேன்.