மத்திய ஐ.மு.கூ. அரசு டீசல் விலையின் மீது அபரிமிதமான உயர்வை அறிவித்திருக்கிறது. லிட்டருக்கு 50 பைசா என மாதந்தோறும் விலை உயரப்போகிறது. இதுமட்டுமல்லாமல், எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மொத்தமாக டீசல் வாங்கும் மாநில அரசுகளின் பேருந்து போக்குவரத்து நிறுவனங்கள், ரெயில்வே, இராணுவம் போன்றவற்றிற்கு வழங்கப்படும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ 12 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் மக்களுக்கு பெரும் அளவிற்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதை யாரும் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அத்யாவசியப் பொருட்களான அரிசி, காய்கறிகள், மற்றும் பிற உணவுப் பொருடகள் உடபட அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயரும்.
மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கும் டீசலுக்கு லிட்டருக்கு ரூ 12 உயர்த்தப்பட்டிருப்பதால் அனைத்து மாநில அரசுகளும் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியத்தையும் உண்டாக்கியிருக்கிறது மத்திய அரசு. இந்தக்கட்டண உயர்வினால், தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு வருடத்திற்கு ரூ 1200 கோடிக்கு மேல் கூடுதல் செலவு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
கடந்த செப்டம்பரில்தான் டீசல் விலை ரூ5 க்கு மேல் உயர்த்தப்பட்டது. இப்போது மேலும் இப்படி ஒரு அதிகபட்ச விலை உயர்வு மக்கள் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி என்பார்கள்.ஆனால், இந்தக் கட்டண உயர்வால் மக்களின் வருமானத்திற்கு பல பக்கங்களிலிருந்தும் அடி விழப் போகிறது.
ஐ.மு.கூ. அரசின் அகராதியில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் என்றால், சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான மானியங்களை இரத்து செய்வது மற்றும் எல்லாப் பொருட்களின் விலைகளையும் உயர்த்துவது என்பதுதான் பொருள் போலிருக்கிறது.
நமது நாட்டில் ஊழல்களின் மதிப்பு இலட்சக்கணக்கான கோடிகளாய் உயர்கிறது; அனைத்து விலைவாசிகளும் நமது விஞ்ஞானிகள் விண்ணில் ஏவும் ராக்கெட்டுகளின் வேகத்தில் உயர்கிறது; பெரும் பணக்காரர்களின் வருமானம் அந்த விலைவாசிகளைக் காட்டிலும் மின்னல் வேகத்தில் உயர்கிறது.ஆனால், சாதரண மக்களின் வருமானம் மட்டும் நத்தையின் வேகத்தைக் காட்டிலும் மெதுவாகத்தான் ஏறுகிறது. இவர்களது வருமானத்தைப் பெருக்குவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள்தான் இப்போதைய உடனடி தேவையாகும். இதற்கான நடவடிக்கைகளே உண்மையான பொருளாதாரச் சீர்திருத்தமாக அமையும். .