தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு, தமிழகத்தில் அமைந்துள்ள நெய்வேலி அனல்மின் நிலையம், கூடங்குளம் கல்பாக்கம் அணுமின் நிலையம் போன்ற மத்திய அரசின் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தற்காலிகமாக தமிழகத்திற்கே தரவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஏற்கனவே வை.கோ, இராமதாஸ், தா. பாண்டியன் போன்ற தலைவர்களும் இதே வேண்டுகோளை விடுத்திருக்கின்றனர்.
மத்தியத் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும், அதற்காக உச்சநீதி மன்ற்த்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கும் நிலையிலும் மத்திய அரசு தமிழகத்திற்கு பிற மாநிலங்களிலிருந்து மின்சாரம் வழங்க மின்வழிப் பாதை இல்லை என்றும் அதனால்தான் தமிழகத்திற்கு மின்சாரம் வழங்க முடியவில்லை என்றும் காரணம் கூறி வருகிறது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது முதல்வரின் கோரிக்கை முழு நியாயமுடையதாகிறது.
பிற மாநிலங்களிலிருந்து மத்திய மின்தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம் தர மின்வழிப்பாதை இல்லை எனும்போது தமிழகத்திலேயே இருக்கும் மத்திய மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு தருவது பிரச்னைக்கு சரியான தீர்வுதானே.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டைக் கண்டித்து தி.மு.க. சமீபத்தில் மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.தமிழகத்தில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி மட்டுமல்ல, தி.மு.க. வசமிருக்கும் 18 எம்.பி.க்களும் கூட தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான். என்வே தி.மு.க.தலைவர் கருணாநிதியும் மத்திய அரசை இதே கோரிக்கைக்காக வலியுறுத்த வேண்டும். தி.மு.க.வின் ஆதரவில்தான் மத்திய அரசே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையின் தமிழகத்தில் மின்வெட்டைப் போக்க மத்திய அரசிடமிருந்து கூடுதல் மின்சாரம் பெற கருணாநிதியோ அல்லது தி.மு.க. எம்.பி.க்களோ இதுவரை எந்த முயற்சியும் மேற்கொண்டதில்லை; வெறும் வேண்டுகோள் கூட விடுத்ததில்லை..
என்வே, கருணாநிதியும் தமிழகத்திலிருக்கும் மத்திய மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்குமாறு பிரதமரை வலியுறுத்த வேண்டும் .வெறும் அறிக்கையோடு நின்று விடாமல் தன் ஆதரவில் செயல்படும் அரசை அனைத்து முறைகளையும் பயன்படுத்தி நிர்ப்பந்திக்க வேண்டும். இல்லையேல் இப்போது மக்களவையில் தி.மு.க.விற்கு இருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கையான 18 அடுத்த தேர்தலில் 0 ஆக மாறிவிடும்.