Tuesday 27 November 2018

எதற்காக மோடி அரசு அகற்றப்பட வேண்டும்..?



மோடி அரசை அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக,  முரண்பாடுடைய சிறு சிறு கட்சிகள் எல்லாம் தங்களுக்குள் கூட்டணியமைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. 

எவ்வித கொள்கை ஒற்றுமையோ  பொதுவான அம்சங்களோ ஆக்கபூர்வமான திட்டங்களோ இல்லாத இவர்கள் எப்படியாவது பதவிகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஓரம்சத் திட்டத்தை மட்டுமே கொண்டிருக்கின்றனர்.. 


எதற்காக மோடி அரசு அகற்றப்பட வேண்டும்..? 


நாட்டில் இதற்கு முன்பிருந்த பல ஆட்சிகளை விட மோடி அரசு சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கரை வருட காலத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது மோடி அரசு. மக்களுக்கு பல நன்மைகளை செய்திருக்கிறது. 


இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத  வகையில் அரசின் மேல்மட்ட ஊழலுக்கு முற்றிலுமாக முடிவுகட்டப்பட்டிருக்கிறது. மக்கள் செலுத்தும் வரிப்பணம் ஒவ்வொரு ரூபாயும் மக்கள் நலத்திட்டங்களுக்கே பயன்படுகிறது. கொஞ்சம் நடுநிலைமையுடன் சிந்தித்துப் பார்த்தால் இது எப்படிப்பட்ட பெரிய சாதனை என்பது புரியும்.


முன்பெல்லாம், 6 மாதங்களுக்கொரு முறை பொது இடங்களில் தொடர் கொண்டு வெடிப்புகள், மக்கள் கூட்டங்களின் மீது பயங்கரவாத தாக்குதல்கள் மதவெறியால்  கொத்து கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்படுதல்  என்ற நிலையிருந்தது. இத்தகைய பயங்கரவாதச் சம்பவங்களுக்கு முடிவுகட்டி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்கிறது இந்த அரசு. ஐமுகூ ஆட்சியின் போது பயங்கரவாத தாக்குதல்களால் காஷ்மீர் தவிர்த்த நாட்டின் பிற பகுதிகளில்  800 க்கும்  மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் ஒன்று கூட நடக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.


எல்லையில் வாலாட்டிக் கொண்டிருந்த பாகிஸ்தான் சீனாவின் அடாவடித்தனங்கள் அடக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் அந்தஸ்து பெருமை பலம் உயர்ந்திருக்கிறது.


சுகாதாரக்  காப்பீடு திட்டத்தின் மூலம் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ( குறைந்த பட்சம் 45 கோடி பேர் ) வருடத்திற்கு 5 இலட்சம் மதிப்பில் உயர்தரமான மருத்துவ சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. நாடு முழுக்க 3000 மலிவு விலை மருந்துக் கடைகள் துவக்கப்பட்டிருக்கின்றன. இங்கு மருந்துகள் வெளிச்சந்தையை விட பாதிக்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. தமிழகம் உட்பட நாடு முழுக்க AIIMS மருத்துவமனைகள் திறக்க நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படுகின்றன.


2022 க்குள் வீடில்லாத அனைவருக்கும் வீடு என்ற இலக்குடன் , இதுவரை சுமார், 1,40,00, 000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. 

இந்தியாவின் மின்வசதி பெறாத கிராமங்களே இல்லை என்ற பெரும் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் பணியும் துரிதமாக நடைபெற்றுவருகிறது.

அரிசி கோதுமை, பருப்பு போன்ற அத்யாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின்  விலைகளும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருக்கின்றது

தேசத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான தேசிய மாநில கிராமச் சாலைகள் அதிவேகத்தில் நிர்மாணிக்கப்படுதல் உட்பட்ட பல்வேறு, அடிப்படைகட்டமைப்பு வசதிகளும்  நீண்டகால வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகள் ஐமுகூ ஆட்சியின்போது - 13 கி.மீட்டர்; ஆனால் மோடி ஆட்சியில்  சராசரியாக ஒரு நாளைக்கு 27 கி.மீ. நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. அதே போல கிராமச்சாலைகள் ஐமுகூ ஆட்சியின்போது ஒரு நாளைக்கு 69 கி.மீ. என்ற அளவில் அமைக்கப்பட்டன. ஆனால், இப்போது ஒரு நாளைக்கு 134 கி.மீ. என்ற அளவில் அமைக்கப்படுகின்றன.


தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. உலக அளவில் தொழில்  துவங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் 65 இடங்கள் முன்னேறி  77 வது இடத்திற்கு இந்த நான்கரை ஆண்டுகளில் இந்தியா முன்னேறியிருக்கிறது. 

உலக வங்கியின் 'எளிதில் மின்சாரம்..அனைவருக்கும் மின்சாரம்' தரவரிசயில், 2014 ஆம் ஆண்டில் 99 வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 26வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 
இவை அபரிமிதமான சாதனையல்லவா..

நாட்டின் வளர்ச்சிவிகிதம் சராசரியாக 8% என்ற நிலையில் இருக்கிறது. வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் சீனாவையும் இந்தியா முந்தியிருக்கிறது. . 


நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன ; இராணுவம் நவீனப்படுத்தப்படுகிறது.


விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு இதுவரை இல்லாத வகையில் உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு என்ற விகிதத்தில்  அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. பயிர்காப்பீட்டு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. 


தேசவிரோத, மத, மொழி, ஜாதி வெறி சக்திகள் ஒடுக்கப்பட்டிருக்கின்றன. 


பணமதிப்பிழப்பு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் கருப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 

வங்களில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமலிருக்கும் பெரும்பணக்காரர்களிடமிருந்து கடனை வசூலிக்க திவாலா சட்டம் உட்பட பல்வேறு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. மோடி  அரசின் புதிய திவால் சட்டம் அறிமுகமான பின், சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது

பன்னெடுங்காலமாக தீர்க்கப்படாத காவிரிப் பிரச்னை தீர்க்கப்பட்டு மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிட்டது; ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வு  காணப்பட்டிருக்கிறது. 

ஐமுகூ வின் 10 ஆண்டு கால ஆட்சியில் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் சென்ற 748 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், கடந்த  நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ஒரு மீனவர் கூட கொல்லப்படவில்லை. அதோடு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு  சாவின் விளிம்பில் இருந்த 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர் .

.இப்படி மக்களுக்கான பல்வேறு நடவடிக்கைகள் கடந்த நான்கரை ஆண்டுகளில்  மோடி அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல  சில முக்கிய சாதனைகள் மட்டுமே இங்கு சொல்லப்பட்டிருக்கின்றன. முழுவதும் சொல்ல வந்தால் பலப்பல பக்கங்களுக்கான கட்டுரையாக இது மாறிவிடும். 


எந்த கட்சியின் ஆட்சிக் காலத்திலும்  இப்படிப்பட்ட அபரிமிதமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டதில்லை. அதுவும் மிகக் குறுகிய காலத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் விசேஷம்.


இப்படிப்பட்ட ஒரு நல்லாட்சியை அகற்ற  உதிரிக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் ஒன்று கூட முயல்கிறார்கள் என்றால், அது அவர்களது சுய இலாபத்துக்கே அன்றி மக்களுக்காக அல்ல. 


பல வருடங்களாக ஊழலில் ஊறித் திளைத்து கோடி கோடியாக சம்பாதித்தவர்கள், மக்கள் பணத்தின் மூலம் தங்கள் குடும்பத்தை வளப்படுத்திக் கொண்டவர்கள், தங்கள் குடும்பத்தினருக்காகவே கட்சியையும் ஆட்சியையும் நடத்துபவர்கள், ஜாதி மத அடிபடையளர்கள் போன்றவர்களே  கடந்த  நான்கரை ஆண்டுகளின் தங்கள் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால் எப்படியாவது மோடியை அகற்றியே தீர வேண்டும் என்பதற்காக ஒன்று கூடுகிறார்கள்.. 


பொய்களை புறம்தள்ளி, ஏமாற்று வேலைகளுக்கு மயங்கிவிடாமல்  மீண்டும் மோடியையே பிரதமராகத் தேர்ந்தெடுப்போம்.


Sunday 26 August 2018

பொய்களின் தலைவர் ராகுல் காந்தி.


என்ன பொய் சொல்லலாம்...
எந்த உண்மையை மறைக்கலாம்..
எப்படி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாம்...
எந்த புரளியை பரப்பி விடலாம்.
.
ராகுலின் பல முகப் பரிமாணங்கள்...






பொய்களைச் சொல்லியே ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறார் ராகுல்.

எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத்தொடங்கி விடுவார்கள்.என்ற கோயபல்ஸின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே ராகுல் செயல்படுகிறார் ஒரே வித்தியாசம் என்னவென்றால் கோயபல்ஸ் ஜெர்மனியோடு தொடர்புடையவர்; ராகுல் இத்தாலியோடு தொடர்புடையவர் 
.
  இந்தியாவில் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்தாலும் அவர் பொய் சொல்ல மட்டும் தவறுவதேயில்லை.
மக்களவையில் பேசும்போதும் மக்கள் மத்தியில் பேசினாலும் செய்தியாளர்களிடம் பேசினாலும் அவர் பொய்களைத்தான் பேசுகிறார்.

அது ரஃபேல் விமானம் வாங்கும் விவகாரமாயிருந்தாலும் டோக்லாம் பிரச்னையாயிருந்தாலும்  அவர் பொய்யான தகவல்களைத்தான் சொல்கிறார்.
பொய்யைத் தவிர எதுவும் பேசமாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்டே அவர் தனது வாயைத் திறக்கிறார்.

பொய்களின் மூலமே மோடியை அகற்றிவிட்டு ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று எண்ணுகிறார். மோடியை குற்றம்சாட்ட,  இப்போதைய மத்திய அரசுக்கு எதிராக மக்களின் கோபத்தை தூண்டிவிட அவருக்கு தகுந்த விஷயங்கள் எதுவும் கிடைக்கவில்லை; அதனால் பொய்களையே தினசரி தனது ஆயுதங்களாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும்  வெளிநாட்டிலிருக்கும் கருப்பு பணம் முழுமையாக  மீட்கப்பட்டால் இந்தியாவில் ஏழைகள் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் இலட்சம் ரூபாய் போடுமளவிற்கு கருப்பு பணம் பதுக்கப்பட்டிருக்கிறது என்று மோடி தேர்தலின் போது பேசியதை ,  தான் பிரதமரானால் வெளிநாட்டிலிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் பணம் போடப்படும் என்று மோடி கூறியதாக திரித்து பிரச்சாரம் செய்வது என அனைத்திலும் பொய்களையே ராகுல் கூறுகிறார். சிறுபான்மையோர் பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள் இந்தியாவில் சமமாக நடத்தப்படுவதில்லை என்று இந்தியாவில் மட்டுமல்ல. வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் கூட அந்நாடுகளில் இந்தியாவைப் பற்றி தவறான எண்ணங்கள் உருவாகும் வகையில் பொய்களைச் சொல்லுகிறார்.

அதேபோல ரஃபேல் போர் விமானம் வாங்கும் விவகாரத்திலும் ராகுலின் பொய்கள் வரம்பை மீறிக் கொண்டிருக்கின்றன.  காங்கிரஸ் ஆட்சியின்போது முடிவு செய்யப்பட்ட விலையை விட குறைவான விலையில் அதிக பாதுகாப்பு அம்சங்களுடனும் ஆயுதங்கள் பொருத்தப்பட்ட நிலயிலும் விமானங்கள் வாங்க இப்போது ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது என்பது மிகத் தெளிவாக ஆதாரங்களுடன் இந்திய  மற்றும் ஃபிரான்ஸ் அரசுகளால் வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட பின்பும், மீடியாக்களில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்ட பின்பும்  கூட ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல்.. ஊழல் என்று தினசரி பொய் ஒப்பாரி வைத்துக் கொண்டு வருகிறார் ராகுல்

அவரது பொய்களின் வரிசையில் லேட்டஸ்டாக  வந்திருப்பது இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து நாடு முழுக்க சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காங்கிரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது.
இந்திரா காந்தி தனது சீக்கியப் பாதுகாவலராலேயே படுகொலையை செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு முழுக்க சீக்கியர்கள் தாக்கப்பட்டனர்; சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளை காங்கிரஸ் தலைவர்கள் தலைமையேற்று நடத்தினர்.டில்லியில் காங்கிரஸின் முக்கிய தலைவர்களான HKL. பகத், ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் போன்றவர்களே தாக்குதல்களை முன்னின்று நடத்தினர் . நாடு முழுக்க ஆயிரக்கணக்கான சீக்கியர்கள்  படுகொலை செய்யப்பட்டனர். ராஜீவ் காந்தி அவர்களே ஒரு பெரிய ஆலமரம் சாய்ந்தால் பூமி அதிரத்தான் செய்யும் என  இப்படுகொலைகளை நியாயப்படுத்திப் பேசினார்.

மக்களனைவரும் அறிந்த இந்த உண்மைகளையே ராகுல் மறைத்து பொய்களைச் சொல்கிறார் என்றால் மற்ற விவகாரங்களில் அவரது பேச்சின் உண்மைத் தன்மை எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளமுடியும். .

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாட்கள்தான் நிலைத்திருக்க முடியும் என்பார்கள்; ஆனால், ராகுலின் பொய்கள் அடுத்த நாளிலேயே அம்பலப்பட்டபோதும் கூட ராகுல் சிறிதும் வெட்கமோ  கூச்சமோ பதட்டமோ இல்லாமல் மீண்டும் மீண்டும் அதே பொய்யை மக்களிடம் கூறிவருகிறார்.
இவ்விஷயத்தில் ராகுலின் கெட்டிக்கரத்தனம் அளவிட இயலாதிருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை. ஆனால், அந்தக் கெட்டிக்காரத்தனத்தின் முன் நாம் முட்டாள்களாகிவிடக் கூடாது . பொய்களைத் திரும்ப திரும்பச் சொன்னால் மக்கள் நம்பத் தொடங்கிவிடுவார்கள் என்ற ராகுலின் நம்பிக்கைக்கு பலியாகிவிடக் கூடாது.