முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கேரளா அரசிற்கு கன்டனம் தெரிவித்திருப்பதோடு தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்காததற்காக மத்திய அரசையும் கண்டித்திருக்கிறார். இந்நிலை தொடர்ந்தால், தி.மு.க. செயற்குழுவைக் கூட்டி முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
இலங்கையில் ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அதற்கு மறைமுக காரணகர்த்தாவாக இருந்த மத்திய காங்கிரஸ் அரசை எதிர்த்து சிறு மூச்சு கூட விட்டதில்லை கருணாநிதி. அதற்காக எந்தக் குழுவையும் கூட்டி முடிவெடுக்கப் போவதாக அறிவிக்கவுமில்லை. ஏனெனில், அப்போது கருணாநிதி பதவியிலிருந்தார்.
இப்போது கேரளாவில் தமிழர்களுக்கு எதிராக நடந்திருக்கிற ஒரு சில தகாத சம்பவங்களுக்காக மத்திய அரசை சாடியிருக்கிறார்; செயற்குழுவைக் கூட்டி முடிவெடுக்கப் போவதாகவும் மிரட்டியிருக்கிறார். ஏனெனில், இப்போது கருணாநிதி பதவியில் இல்லை.
இதிலிருந்து ஒரு விஷயம் நமக்கு தெளிவாகிறது. கருணாநிதி பதவியிலிருந்தால் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தமாட்டார்; தன் குடும்ப உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாப்பதில்தான் முழு கவனமும் செலுத்துவார்.ஆனால், அவர் எதிர்க்கட்சியில் இருந்தால் தமிழர்களுக்காக ஓங்கிக் குரல் கொடுப்பார்.
புராணத்தில் ஒரு கதை உண்டு. ஒரு சமயம் சீதேவி ( sri devi ) க்கும் மூதேவிக்கும் யார் அதிக அழகு என்பதில் போட்டி வந்தது. இருவரும் திருமாலிடம் கென்று நியாயம் கேட்டார்கள். திருமால் அவர்களை சிறிது தூரம் நடந்து சென்று விட்டு மீண்டும் தன்னை நோக்கி வரச்சொன்னார். இருவரும் அப்படி வந்தவுடன் அவர்களைப் பார்த்து, "நீங்கள் இருவருமே அழகுதான்; மூதேவி போகும்போது அழகு; சீதேவி ( sri devi ) வரும்போது அழகு" என்றார்
அது போல கருணாநிதி எதிர்க்கட்சியாயிருக்கும் போதுதான் அழகு; அதாவது அப்போதுதான் தமிழர்களின் நலன்களுக்காக குரல் கொடுப்பார். என்வே, தமிழர்களாகிய நாம் எப்போதும் கருணாநிதி எதிர்க்கட்சியிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்வோம்.