Saturday 12 September 2020

திமுக வின் நாடக அரசியல்

                                     

தமிழகத்தில் திடீரென்று ஹிந்தி எதிர்ப்பு கோஷம் தீவிரமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.' ஹிந்தி என்கிற பூதம் ' நம்மை விழுங்க காத்திருக்கிறது என்கிற ரீதியில் மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் ஒரு அச்ச உணர்வை உண்டாக்க திறமையான முறையில் திரைக்கதை வசனத்தை எழுதி, ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இந்த நாடகத்தின் தயாரிப்பு டைரக்க்ஷன் எல்லாம் திமுகதான் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சமீப காலங்களில் தமிழகத்தில் இளைஞர்கள் அதிக அளவில் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். குக்கிராமங்கள் தொடங்கி பெருநகரங்கள் வரை பா.ஜ.க.வின் வளர்ச்சி தெளிவாகத் தெரிகிறது. மறுபுறம், தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என்று மக்கள் பேசிக் கொள்வதை பல இடங்களில் கேட்க முடிகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிற நிலையில் ஜெயலலிதா இல்லாத அதிமுக நன்றாக காலுன்றி வருகிறது.

ஆனால், திமுக நிலைகுலைந்து நிற்கிறது. ஸ்டாலின் கட்சியை திறம்பட வளர்க்கவோ பலப்படுத்தவோ முடியாத தலைவராக  இருக்கிறார்.. புதிதாக வாக்களிக்கும் வயது வந்த இளைஞர்கள் பலரும் திமுக வை நாடுவதில்லை; அவர்கள் பா.ஜ.க. வையே விரும்புகின்றனர். மோடியின் செயல்பாட்டு திறமை அவர்களை ஈர்த்து வருகிறது. சீன ஆக்ரமிப்புக்கு எதிராக இந்தியா எடுத்துவரும் உறுதியான அச்சமில்லாத பதில் நடவடிக்கைகள், கடந்த 6 வருடங்களில் ஊழலே இல்லாத ஆட்சி, பெரிதாக எந்த மதக் கலவரங்களும் இல்லாத நிலை, கொரானாவுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள், கொரானாவால் பொருளாதார சரிவு ஏற்பட்ட போதிலும் தேசம் வீழ்ந்து விடாமல் இருக்க எடுக்கப்பட்ட திறம்பட்ட நடவடிக்கைகள், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் விவசாயத்தை மீட்கவும் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய திட்டங்கள் போன்றவை பா.ஜ.க. அரசு மீது மக்களுக்கு பெரிதும் நம்பிக்கையை உண்டாக்கியிருக்கின்றன. அதனால், பா.ஜ.க. வை நோக்கி மக்கள் வருவது அதிகரித்து வருகிறது. திமுக வின் தொடர்ச்சியான ஹிந்து விரோதச் செயல்பாடுகளின் எதிர்வினையாகவும் மக்கள் பா.ஜ.க. பக்கம் தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர். ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்தபோது கூட, திமுக எம்.எல்.ஏ. ஒருவர் கூட அக்கட்சியை விட்டு விலகியதில்லை. இப்போது ஒரு.எம்.எல்.ஏ.வே திமுக வை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

இத்தகைய சூழ்நிலையில்தான், தனது வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த மக்களின் உணர்ச்சியை தூண்டி விடும் வகையில், மொழிப் பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது திமுக. ஆனால், இந்த முறை ஹிந்தி எதிர்ப்பு பருப்பு தமிழகத்து நீரில் வேகப்போவதில்லை என்றே தோன்றுகிறது..ஏனெனில்,திமுக வின் வேஷம் மக்களிடம் கலைந்து வருகிறது.

ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் சன்ஷைன் பள்ளியில் ஹிந்தி கற்றுத்தரப்படுகிறது. அதே போல திமுக தலைவர்கள் நடத்தும் பல பள்ளிகளிலும் ஹிந்தி ஒரு பாடமாக இருக்கிறது. கனிமொழி உட்பட திமுக தலைவர்களின் பிள்ளைகள் பலரும் ஹிந்தி கற்கிறார்கள். ஆனால், சாதாரண மக்களின் பிள்ளைகள் மட்டும் ஹிந்தி கற்கக் கூடாது என்கிறது திமுக. திமுக வின் இந்த கபட நாடகத்தை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுவிட்டார்கள்.

ஒவ்வொருவரும் ஹிந்தி கட்டாயம் படித்தே தீர வேண்டும் என்று சொல்லப்பட்டால், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நியாயாமானதாகவே இருக்கும். ஆனால், ஹிந்தி ஒரு விருப்பப் பாடமாகவே இருக்கிறது. விரும்புகிறவர்கள் ஹிந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கலாம். ஹிந்தியை விரும்பாதவர்கள், ஹிந்திக்கு பதிலாக, வேறு ஒரு இந்திய மொழியையோ அல்லது ஒரு அந்நிய நாட்டு மொழியையோ படிக்கலாம். என்றே புதிய கல்விக் கொள்கை 2020 கூறுகிறது. இதில் எங்கே ஹிந்தி திணிப்பு இருக்கிறது..?

தங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஹிந்தி படிக்க வைக்கும் திமுக மற்றவர்களின் வீட்டுப் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்கிறது. தாங்கள் நடத்தும் பள்ளிக் கூடங்களில் பணம் வாங்கிக் கொண்டு ஹிந்தி கற்பிக்கும் திமுக வினர், அரசுப் பள்ளிகளில் இலவசமாக் ஹிந்தி கற்பிக்கக் கூடாது என்று போராடுகின்றனர்; இப்படி இரட்டை வேடம் போடும் திமுக வின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டார்கள். குடிப்பதை தடுக்க எவ்வித பிரச்சாரங்களையும் முயற்சிகளையும் செய்யாத திமுக, ( பெரும்பாலான மது உற்பத்தி ஆலைகளை நடத்துவதும் திமுக வினரே ) பிள்ளைகள் படிப்பதை கெடுக்க நினைக்கிறது.

ஹிந்தி படித்தால் தமிழ் அழிந்துவிடும் என்பது திமுக முன்வைக்கிற மற்றொரு கருத்து.கூடுதலாக ஒரு மொழியை கற்பதால் அழிந்துவிட தமிழ் ஒன்றும் பலகீனமான மொழி அல்ல; இத்தனை வருடங்களாக ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வந்த போதிலும் அழியாத தமிழா ஹிந்தி கற்பதால் அழிந்துவிடப் போகிறது..? தமிழ் என்றும் அழியாது. கர்நாடகம் கேரளா போன்ற மாநிலங்களில் பல வருடங்களாக ஹிந்தி மூன்றாவது மொழியாக இருக்கிறது. மலையாளமும் கன்னடமும் அழிந்து விட்டதா..?

திமுக மக்களை ஏமாற்ற நினைக்கிறது. தங்களின் அரசியல் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த ஹிந்தியை ஒரு பூச்சாண்டியாக மக்களிடம் காட்ட முயல்கிறது. இந்த முறை திமுக வின் இந்த முயற்சி வெற்றி பெறப்போவதில்லை. மக்கள் திமுக வின் நாடக அரசியலை நன்றாக புரிந்து கொண்டுவிட்டார்கள். திமுக வின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது.

Wednesday 22 April 2020

கொரானாவை வெல்வோம்.



சீனாவில் உருவான அல்லது உருவாக்கப்பட்ட கொரானா வைரஸ் உலக நாடுகளில் மிகப்பெரும் பாதிப்பை உருவாக்கி மக்களை நிலைகுலைய வைத்திருக்கிறது. உலகம் முழுக்க சுமார் 1,80,000 மக்களின் உயிர்களை பலி வாங்கியிருக்கும் நிலையில், இதன் முடிவுக்கு இன்னமும் கூட நிலையான தீர்வு காணப்படாமலிருக்கிறது. 

உலகப் பொருளாதாரம் மண்ணில் வீழ்ந்து கிடக்கிறது. இதுவரை இல்லாத வகையில் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0 டாலருக்கும் குறைவாகப் போய்  -32 டாலர் என்ற நிலையை எட்டியிருக்கிறது. உலக நாடுகளில் ஊரடங்கின் காரணமாக பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு மிகவும் குறைந்து போயிருப்பதால் கச்சா எண்ணெயை சேமித்து வைக்க கிடங்குகள் இல்லாத நிலையில் உற்பத்தி நிறுவனங்கள் கச்சா எண்ணெய் வாங்குபவர்களுக்கு 32 டாலர் அளிக்கும் ஒரு விசித்திர நிலை உருவாகியிருக்கிறது. 

வைரஸின் சீற்றம் இன்னும் குறைந்தபாடில்லை. மீண்டும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டிய நிலையில், வேலையின்மை அதிகரித்து ஏழை மக்கள் வாழ்வாதாரம் முடங்கிப் போகும் ஆபத்திருக்கிறது . உலகின் மற்ற நாடுகளை விட நமது நாட்டு மத்திய மாநில அரசுகள் நிலைமையை சிறப்பாக கையாண்ட போதிலும் கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.

அமெரிக்க, ஜெர்மனி, ஃபிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கொரானா பாதிப்புகளுக்கு காரணமாக சீனாவை பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றன. சில நாடுகள் சீனாவிடமிருந்து நஷ்ட ஈடும் கோரியிருக்கின்றன. சீனாவின் அலட்சிய மனப்பான்மையே கொரானா பரவலுக்கு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டப்படுவதோடு, கொரானா சீனாவின் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்பின் விளைவாக இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் உருவாகி விசுவரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இது உண்மையாகவும் இருக்கக் கூடும் ; ஏனெனில் சீனா அப்படிப்பட்ட ஒரு நாடுதான். கொரானா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின் உலக நாடுகள் சீனாவுக்கு எதிராக திரண்டெழக் கூடும். சீனாவுக்கு எதிராக யுத்தம் என்பது சாத்தியமற்றது. ஆனால், பொருளாதார தடை உட்பட்ட பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை சீனா எதிர் கொள்ள நேரிடலாம்.                       


இதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்; நாளை உலகின் எந்த நாடாவது கொரானா போன்ற ஒரு வைரஸை செயற்கையாக உருவாக்கி, அதற்கு முடிவு கட்டும்  மருத்துவ இரகசியத்தையும் தன் வசம் வைத்துக் கொள்ளும் சக்தி பெற்றால், அதுவே உலகின் மிகப் பெரும் வல்லரசாக மாறும்.அதுவே உலகின் பெரும் அழிவை உருவாக்கும் ஆயுதமாகவும் விளங்கும். இது இப்போதைக்கு கற்பனை என்றாலும் வரும் காலம் இதை நிஜமாக்கலாம். உலக வல்லரசுகளின் மத்தியில் இப்போதே இது போன்ற ஒரு திட்டம் உருவாகி இருக்கவும் கூடும்.ஆனால், இதுபோன்ற கற்பனைகள் நிஜமாகும்போது, அவற்றையும் எதிர்கொள்ளும் மாற்று சக்தியை அல்லது அதே போன்றதொரு அழிவு சக்தியை நம் நாடும் பெற்றிருக்கும். 

இப்போது கொரானாவுக்கு எதிராக நமது மத்திய மாநில அரசுகள் நடத்தும் போரில் உதவ பொருளாதார வசதி பெற்ற ஒவ்வொருவரும் தம்மாலான பெரும் நிதி உதவியை அரசுகளுக்கு அளிக்க வேண்டும். அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து மக்களும் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் கொரானாவுக்கு எதிரான போரில் இந்தியா முழுமையான வெற்றி பெறும்.

Friday 13 March 2020

இந்த தயக்கம் தேவைதானா...?



திரு.ரஜினிகாந்த் அவர்கள் தான் முதல்வராக விரும்பவில்லை என்றும், இப்போதைய அரசியல் சூழ்நிலைகளுக்கு எதிராக மக்களிடையே எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே தான் அரசியலுக்கு வரப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் பதவியை விரும்பாதவராக இருக்கிறார் என்பது  மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். சமுதாயத்தில் அநீதிகள் மலிந்திருக்கின்றன; அரசியல் போக்குகள் சீர்திருத்தப்பட வேண்டும் எனும்போது, ரஜினிகாந்த் தான் தலைமை தாங்கி முன்னெடுத்துச் சென்று அதை மாற்றிக்காட்ட வேண்டுமே தவிர, மக்களிடையே எழுச்சி ஏற்பட்டபின் தான் நான் தலைமை தாங்க வருவேன் என்று அறிவிப்பது இல்லாத ஊருக்கு வழிகாட்டுவதாகும்.

ரஜினிகாந்த் அவர்களுக்கு நாட்டுக்கு மற்றும் தமிழகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அவர் தேசப்பற்று மிக்கவராக இருக்கிறார்; பொது வாழ்க்கையில் தூய்மையும் நேர்மையும் மிக்கவராக இருக்கிறார். மக்கள் போகும் பாதையில் கும்பலோடு கும்பலாகச் செல்லாமல் மக்களுக்கு தேவையான கருத்துக்களை எதிர்ப்புகள் வந்தாலும் அஞ்சாமல் எடுத்துரைக்கிறார்.; அதோடு அவருக்கு கணிசமான மக்கள் ஆதரவும் இருக்கிறது. பிரதிபலனை பார்க்காமல் அவருக்காக உழைக்கிற மக்கள் கூட்டம் இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் அரசியலில் முன்னணிக்கு வரவேண்டும்.  தனக்கு இருக்கும் செல்வாக்கையும் ஆதரவையும் மக்கள் நலனுக்கு ஆதரவாகச் செயல்படுத்த துணிந்து களத்தில் இறங்க வேண்டும். அப்போதுதான் அரசியம் தூய்மை அடையும். மக்கள் நல்ம் பெறுவார்கள். அவர் விரும்பும் சிஸ்டமும் சரியாகும் . ஆனால், ஏனோ தெரியவில்லை ...அவர் தயங்குகிறார்.

அவர் அறிவித்திருக்கும் நிபந்தனைகள், திட்டங்கள் சில காரிய சாத்தியமாற்றவை.
பொதுவாக நல்லவர்கள் வல்லவர்களாக இருப்பதில்லை; வல்லவர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை. ஆனால், ரஜினிகாந்த் நல்லவராகவும் வல்லவராகவும் மக்கள் ஆதரவு பெற்றவராகவும் இருக்கிறார்.  இந்நிலையில் அவர்தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதைவிட்டு, மக்கள் முன்னெடுத்து வந்தால் நான் பின்னால் வருவேன் என்பது தட்டிக் கழிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படும்.

இனியும் கூட எல்லாம் முடிந்து விடவில்லை. இப்போதும் கூட அவர் தனது நிலையை  மாற்றிக் கொண்டு வெற்றியோ தோல்வியோ அதைப் பற்றி கவலைப்படாமல், அவர் மனதில் இருக்கும் நல்ல திட்டங்களை சிந்தனைகளைச் செயல்படுத்த  மக்களுக்கு தலைமை தாங்கி களத்தில் இறங்கலாம்.

அப்படி செய்ய அவர் விரும்பவில்லை என்றால், அவருக்கு மாற்று வழியும் இருக்கிறது.
தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த முயலும் தீய சக்திகளை ஒழித்துக்கட்ட , தேசபக்தியுள்ள,  உண்மையான மதச்சார்பற்ற கொள்ள்கையுடைய ,நாட்டு நலன் மக்கள் நலனில் அக்கறையுடைய  அரசியல் சக்திகளுக்கு அவர் உடனிருந்து ஆதரவு தெரிவிக்கலாம். 

பெரும் மக்கள் ஆதரவு அவரது பின்னணியில் இருக்கிறது.  காரணமில்லாத தயக்கத்தாலோ, அல்லது வேறு ஏதோ காரணங்களுக்காகவோ  அந்த அபரிமிதமான ஆதரவை வீணடித்து விடாமல் அவர் சாதித்து காட்ட வேண்டும்.

எதிர்கால சரித்திரம் குற்றம் சாட்டும் நிலைக்கு அவர் தன்னை ஆளாக்கிக் கொள்ளக் கூடாது.

Thursday 23 January 2020

என்ன தவறிருக்கிறது இதில்...?


ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் ஆண்டு விழாவில் பேசும்போது, 1971ல் சேலத்தில் ஈ.வெ.ரா. நடத்திய ஹிந்து எதிர்ப்பு மாநாட்டில் இராமபிரான் மற்றும் பிற ஹிந்துக் கடவுள்கள் இழிவுபடுத்தப்பட்டனர். .. அந்தச் செய்தியை பிற பத்திரிக்கைகள்  எதுவும் வெளியிடவில்லை; துக்ளக் மட்டுமே வெளியிட்டது என்று பேசியிருந்தார். துக்ளக் ஆண்டு விழாவில் துக்ளக்கின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் இக்கருத்தை வெளியிட்டிருந்தார்.

இக்கருத்து, ஈ.வெ.ரா. வை இழிவுபடுத்துகிறது என்றும் அதற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தி.க., தி.மு.க., மற்றும் அவர்களது ஆதரவு கட்சியினர் பல இடங்களில் வழக்கு தொடுத்தனர்; போராட்டங்களும் நடத்தப்பட்டன. அதற்கு அவர், நான் உண்மையைத்தான் சொன்னேன்...மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதியாக அறிவித்து விட்டார்.

இதில் ஈ.வெ.ரா. அவமதிப்பு எங்கிருந்து வந்தது..? அந்த ஊர்வலத்தில் ஈ.வெ.ரா.வலும் மற்றவர்களாலும் ஹிந்துக் கடவுள் சிலைகள் அவமதிக்கப்பட்டன என்பது ஆதாரபூர்வமான உண்மை. அதை பல பத்திரிக்கைகளிலும் சோஷியல் மீடியாக்களிலும் வந்த படங்களும் செய்திகளும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இப்போது தி.க வினர்களும் மற்றவர்களும் என்ன சொல்ல விழைகிறார்கள்..? ஊர்வலத்தில் ஹிந்துக் கடவுளர்கள் யாரும் அவமதிக்கப்படவில்லை என்றா..? அப்படியானால், அந்த ஊர்வலத்தில் ஹிந்துக் கடவுள் சிலைகள் ஏன் கொண்டுவரப்பட்டன..? தி.க. வினர் ஹிந்துக் கடவுளர்களின் பக்தி ஊர்வலமா நடத்தினார்கள்..?

தி.க. வினர் காலம் காலமாக பகுத்தறிவு என்ற பெயரில், கோடானு கோடி மக்கள் பக்தியுடன் வழிபடும்  ஹிந்துக் கடவுளரையும் ஹிந்து மதத்தையும் நாக்கூசும் வார்த்தைகளால் கேவலமாக விமர்சிப்பதை தங்கள் முழு நேரப் பணியாகச் செய்து வருகின்றனர். இது ஹிந்துக்களை இழிவுபடுத்துவது ஆகாதாம்.. ஆனால், ரஜினிகாந்த் வேறு ஒரு விஷயம் பற்றி பேசும்போது எதேச்சையாக சேலம் மாநாட்டைப் பற்றி குறிப்பிட்டால் அது ஈ.வெ.ரா. வை அவமானப்படுத்துவது ஆகுமாம்.

என்ன முட்டாள்தனமான சிந்தனை இது..? 
எந்த நாட்டிலுமே பெரும்பான்மை மதத்தினர்கள்தான் மேலாண்மை செலுத்துவார்கள். ஆனால், நம் நாட்டில் பெரும்பான்மை மதத்தினரான ஹிந்துக்கள் நசுக்கப்படுகிறார்கள்; அவமானப்படுத்தப்படுகிறார்கள்; ஹிந்து மதம் சிறுமைப் படுத்தப்படுகிறது.

இந்நிலையில் குனியக் குனியக் குட்டுவது போல ஹிந்து மதம் இழிவுபடுத்தப்படுவதை சொல்வது கூட குற்றம் என்பது போல தி.க. வினரின் பேச்சும் செயலும் அமைந்திருக்கிறது. தி.க.வின் இந்த அராஜகச் செயலுக்கு திமுக வும் காங்கிரசும் அதன் உதிரிக் கட்சிகளும் துணை போகின்றன.

யானைக்கு தன் பலம் தெரியாது என்பார்கள். அந்த தன் பலமறியாத யானையின் நிலையில் ஹிந்துக்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதனாலேயே இவை சாத்தியமாகியிருக்கிறது.
குனிய குனிய குட்டுபவன் மட்டுமல்ல...குட்ட குட்ட குனிபவனும் கூட முட்டாள்தான் .
இந்த முட்டாள்தனத்தை ஹிந்து சமுதாயம் கைவிடும்போது, எல்லாம் மாறும். வரும் காலம் அந்த மாற்றத்தை சாதிக்கும்.





-