வறுமையற்ற, வலிமை மிகுந்த, கல்வி அறிவு மிகுந்த, ஊழலற்ற, பயங்கரவாதம் வேரறுக்கப்பட்ட, சாதி, மதம் போன்றவற்றால் தங்களை பிளவு படுத்திக் கொள்ளாத, குண்டுவெடிப்புகளால் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து கிடக்காத ... இப்படி ஒரு ஒளி மிகுந்த இந்தியாவை நான் காண விரும்புகிறேன். இது ஒரு கனவாக இருக்கலாம்; ஆனால், நாம் ஒற்றுமையாய் முயன்றால் நம் கண்ணெதிரிலேயே இதை நிஜமாய்க் காண முடியும்.
ஒரு காலத்தில் குஜராத் நாட்டின் பத்தோடு பதினோராவது மாநிலமாகத்தானிருந்தது; இன்று நாட்டின் முதன்மையான மாநிலமாகியிருக்கிறது. அமெரிக்காவே பாராட்டும் பெருமையைப் பெற்றிருக்கிறது. நேற்று வரை பீஹார் நாட்டின் பின்தங்கிய மாநிலம் என்ற பெயரைப் பெற்றிருந்தது; இன்று வளர்ச்சிப் பாதையில் வேகமாய் முன்னேறுகிறது. திருவாளர்கள் மோடியும் நிதிஷ் குமாரும் இதன் காரணகர்த்தாக்கள். இதுபோன்ற தலைவர்கள் நாட்டின் அதிகாரத்திற்கு வரும்போது இன்று உலகில் ஒரு நாடாக இருக்கும் இந்தியா உலகின் முதன்மை பெற்ற நாடாகிவிடும்.
ஊழல் நமது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாய் இருக்கிறது; எங்கும் எதிலும் ஊழல் என்று ஒரே ஊழல் மயமாயிருக்கிறது. மக்கள் தங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தில் வரியாகவும் பிற வகைகளிலும் அரசுக்கு போகும் வருமானம் அந்த மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுவதை விட ஊழல்வாதிகளால் சுருட்டப்படுவதே அதிகமாயிருக்கிறது. சமீப காலமாக, தொடர்ச்சியாக விசுவ ரூபமெடுத்து வரும் ஊழல்கள் குறிப்பாக போஃபர்ஸ் ஊழல், 2ஜி மெகா ஊழல், காமன்வெல்த் ஊழல் போன்றவைகள் இந்தியா ஊழல்வாதிகளின் தேசமோ என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டது; உலக நாடுகளின் மத்தியிலும் கூட இந்தியாவிற்கு இவை மிகப்பெரும் அவப்பெயரை தேடித் தந்திருக்கின்றன.
இதனால், மக்களிடையே ஊழலுக்கெதிராக மிகப்பெரும் கொந்தளிப்பு உருவாகியிருக்கிறது. திருவாளர்கள் அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்களின் போராட்டங்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு இதன் விளைவே. ஊழலுக்கெதிரான இந்தக் கொந்தளிப்பு மக்களிடம் நிலைத்திருக்கும் பட்சத்தில் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அச்சம் தோன்றும்; ஊழல் செய்தால் இலஞ்சம் வாங்கினால் பதவியில் நீடித்திருக்க முடியாது என்ற நிலை உருவாகும்.. நமது வீட்டில் ஏதேனும் திருடு போனால் திருடியவர்களுக்கு எத்தகைய மரியாதையை தருகிறோமோ அதே மரியாதையைத்தான் நமது நாட்டில் திருடியவருக்கும் ( ஊழல் செய்தவர்களுக்கும் ) நாம் வழங்க வேண்டும். சொல்லப்போனால், வீட்டில் திருடுபவர்களை விட நாட்டில் திருடுபவர்கள்தான் நமக்கு மிகப்பெரும் கேடு விளைவிக்கிறார்கள். இதோடு, ஊழலுக்கெதிராக கடுமையான சட்டங்கள் வேண்டும். ஊழல் செய்தால் கடும் தண்டனை உறுதி; ஊழலில் சம்பாதித்த செல்வமும் பறிக்கப்படும் என்ற நிலை உருவாகும்போது ஊழலுக்கு முடிவு ஏற்பட வழி கிடைக்கும். .
ஊழலைப் போலவே பயங்கரவாதமும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளால் மக்கள் தங்களை பிளவுபடுத்திக் கொள்வதும் நாட்டைப் பீடித்திருக்கும் மிகப்பெரும் பிணிகளாகும். இப்பிணிகளைப் போக்க மக்கள் ஒன்றுபட்டெழ வேண்டும். நம் நாட்டில் பல்வேறு சாதிகள், மொழிகள், இனங்கள், மதங்கள் உண்டு. இவற்றிற்கிடையே வேறுபாடுகள் நிலவுவது சகஜமே. ஆனால்,இந்தியர்களிடம் சாதி மாத உணர்வுகள் வேரூன்றியிருந்தாலும் நாடு பெரும் சிக்கலை சந்திக்கும் போதெல்லாம் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து இந்தியனாய் பிரச்னையை எதிர் கொள்ளும் பக்குவமுண்டு. இந்தியா அண்டை நாடுகளுடன் போர்களில் ஈடுபட்டபோதும் இயற்கைப் பேரழிவுகளை சந்தித்த போதும் இந்த ஓற்றுமையை நாம் கண்டிருக்கிறோம். அதே சமயம் இந்த சாதி மத வேறுபாடுகளை மேலும் மேலும் பெரிதாக்கி மக்களைபிளவுபடுத்தி அவர்களுக்குள் மோதலை உண்டாக்கி அதில் தங்களை வளர்த்துக் கொள்ள நினைக்கிறார்கள் சில சுயநல அரசியல்வாதிகளும் தலைவர்களும். இத்தகைய தலைவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாயிருப்பதோடு அவர்களை புறக்கணிக்கவும் செய்ய வேண்டும்.
இந்தியா சந்திக்கிற மேலும் ஒரு முக்கிய பிரச்னை பயங்கரவாதம். மத அடிப்படையில் எழுகின்ற இந்த பயங்கரவாதப் படுகொலைகளுக்கு முழுக்க முழுக்க அரசே பொறுப்பு. மூன்று மாதத்திற்கொரு முறை அல்லது ஆறு மாதத்திற்கொரு முறை என குண்டுவெடிப்புகளால் கொத்து கொத்தாக மக்கள் மடிந்து கிடப்பதை தோலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் காண நேரும்போது நெஞ்சம் பதைக்கிறது. ஆனால் அரசோ அதைபற்றி எவ்வித கவலையும் கொள்வதில்லை. பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தை தொடங்குவதற்கு பதிலாக அரசு அரசியல் இலாப நஷ்டக் கணக்குகளின் அடிப்படையில் பிரச்னையை ஆறப்போடுவதாலேதான் பயங்கரவாதம் மீண்டும் மீண்டும் மக்களை தாக்கி வருகிறது. நாட்டின் ஜனநாயகத்தின் உருவகமாக விளங்கும் பாராளுமன்றத்தை தாக்கிய பயங்கரவாதிக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்த பின்னும் அரசு பல ஆண்டுகளாக தண்டனையை நிறைவேற்றாமல் அவனைப் பாதுகத்து வருவதே இதற்கு சாட்சி; காஷ்மீர் பிரச்னையும் இப்படித்தான்; அரசின் மென்மையான , உறுதியற்ற நடவடிக்கைகளால், அது பிரச்னையாகவே காலாகாலத்திற்கும் நீடித்துக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி எனும்போது அது சம்பந்தமாக் பாகிஸ்தானை கூவிக் கூவி அழைத்து அரசு ஏன் பேச்சுவார்த்தை நடத்துகிறது ..?
சுருங்கச் சொன்னால், நாம் அனைவரும் இந்தியர்கள்; இந்த தேசம் நம்முடையது; இதை நமது வீடு போல பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் போலிகளை அடையாளம் கண்டு, தேசத்திற்கு நல்ல நிர்வாகம் அளிக்க முடியாதவர்களையும், அதிகாரங்களை பயன்படுத்தி மக்களை சுரண்டுபவர்களையும் தண்டிப்போம் என்ற முடிவை நாம் கொள்வோம்; அடுத்த சில வருடங்களில் ஒளிமிகுந்த இந்தியாவை நாம் காண்போம்.